கர்நாடக மாநிலத்தில் ஜெய்பீம் என்று ஒருதரப்பு மாணவர்களும், ஜெய் ஸ்ரீராம் என்று மற்றொரு தரப்பு மாணவர்களும் கோஷமிட்டுக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த விவகாரத்தைக் கண்டித்து மாணவர்கள் இந்த கோஷங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் இயங்கி வரும் ஐடிஎஸ்ஜி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் கோஷமிட்டனர்.
ஆதரவு தெரிவித்த மாணவர்கள் 'ஜெய் பீம்' என்றும், எதிர்க்கும் மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' எனவும் கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்திற்கு மேல் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை ஆசிரியர்கள் தலையிட்டு கலைத்தனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹிஜாப் விவகாரம்:
கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. குந்தாப்பூர் அரசுக் கல்லூரி மாணவிகள் இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
ஹிஜாப் அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்லூரியில் தனியறையில் அமரவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.