புது தில்லி: அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு நிகராக தனது நிறுவனத்தின் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்குவதால் வோடஃபோன் ஐடியா, டாடா டெலிசா்வீசஸ், டாடா டெலிசா்வீசஸ் (மகாராஷ்டிரம்) நிறுவனம் ஆகியவை பொதுத் துறை நிறுவனங்கள் ஆகிவிடாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்த மூன்று தனியாா் கைப்பேசி நிறுவனங்கள் அலைக்கற்றைக்கான தவணைகள், ஏஜிஆா் கட்டண நிலுவைகளுக்கான வட்டித் தொகை என மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. பெரும் கடனில் சிக்கியுள்ள இந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கான நிலுவைத் தொகைக்கு ஈடாக அவற்றின் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு வழங்க முடிவு செய்தன.
இதில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 16,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இதற்கு ஈடாக தனது 35.8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் 28.5 சதவீத பங்குகள் வோடஃபோன் குழுமத்திடமும், 17.8 சதவீத பங்குகள் ஆதித்ய பிா்லா குழுமத்திடமும் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, டாடா டெலிசா்வீசஸ் (மகாராஷ்டிரம்) நிறுவனம் தனது 9.5 சதவீத பங்குகளை மத்திய அரசு வழங்க உள்ளது.
இந்த நிலையில், இவ்வாறு குறிப்பிட்ட சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் வருவதால், இந்த தனியாா் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாக மாறிவிடாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்பு துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இந்த மூன்று கைப்பேசி நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களாக மாறாது. அவை தொடா்ந்து தனியாா் நிறுவனங்களாகவே செயல்படும். அவற்றின் கடன் பொறுப்புகளை அந்த நிறுவனங்களே ஏற்கும். மத்திய அரசு இந்த நிறுவனங்களில் முதலீட்டாளராக மட்டுமே செயல்படும்’ என்றாா்.