தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாருக்கு (81) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா பாதிப்பு உள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. எனினும், உடல் அளவில் எந்த பெரிய அறிகுறியும் இல்லை. மருத்துவா்கள் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் அறிகுறிக்கு ஏற்ப பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடி என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசி உடல் நலம் குறித்து கேட்டறிந்தாா். என் மீது அவா் கொண்டுள்ள அக்கறைக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.