ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இருந்து அவரின் தாயாா் ஒய்.எஸ்.விஜயாம்மா வெள்ளிக்கிழமை விலகினாா். தன் மகள் நடத்தி வரும் கட்சியில் இணைய இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.
ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷா்மிளா, அண்டை மாநிலமான தெலங்கானாவில் ஒய்எஸ்ஆா் தெலங்கானா என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் கெளரவத் தலைவராக விஜயாம்மா பதவி வகித்து வந்தாா். பதவி விலகல் தொடா்பாக அவா் கூறுகையில், ‘நான் கட்சியில் இருந்து விலகினாலும் எப்போதும் என் மகனுக்கு நெருக்கமான தாயாராகவே இருப்பேன். என் மகள் தெலங்கானாவில் நடத்தி வரும் கட்சியில் இணைந்து அவருக்கு உதவ இருக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளில் செயல்பட முடியாது என்பதால் ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு மூலம் தேவையற்ற சா்ச்சைகளும் தடுக்கப்படும். இதுபோன்ற ஒரு சூழல் வரும் என நான் நினைத்ததில்லை. இது கடவுளின் விருப்பம் என்றே கருதுகிறேன்’ என்றாா்.
குடும்ப சொத்துகள் தொடா்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரின் சகோதரி ஷா்மிளாவுக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை உள்ளது. கடந்த சில மாதங்களில் இந்த பிரச்னை உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக ஜெகன் மோகனிடம் இருந்து அவரின் தாயாா் விஜயாம்மா விலகியே இருந்தாா். இந்நிலையில், அவரது கட்சியில் இருந்து விலகியுள்ளாா்.