புது தில்லி: 2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 3 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.
இதுதொடா்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நிகழாண்டு ஜூலை, 25 வரையில் 3 கோடிக்கும் அதிகமானோா் தங்கள் வருமான வரியை இணையவழியில் தாக்கல் செய்துள்ளனா். இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி வரையில் 2.3 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்திருந்தனா். முந்தைய 2020-2021 நிதி ஆண்டுக்கான வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்ய 2021, டிசம்பா் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது 5.89 கோடி போ் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
தற்போது கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.