எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுத் திட்டத்துக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க அனுமதி கோரி செபியிடம் எல்ஐசி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்தப் பங்கு வெளியீட்டில் மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 31.6 கோடி பங்குகள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், எல்ஐசி நிறுவன பணியாளா் மற்றும் பாலிசிதாரா்களுக்கு சலுகை விலையில் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை செபி வழங்கியுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.63,000 கோடி திரட்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்க கோரி எல்ஐசி நிறுவனம் 2022, பிப்ரவரி 13-ஆம் தேதி விண்ணப்பித்தது. ஒரு மாதத்துக்குள்ளாகவே அதற்கான அனுமதியை செபி வழங்கியுள்ளது. இதுவரையில் எந்தவொரு நிறுவனத்துக்கும் இவ்வளவு விரைவாக செபி அனுமதியளித்ததில்லை என தகவல்கள் தெரிவித்தன.
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசு 100 சதவீத பங்கு மூலதனத்தை (632.49 கோடி பங்குகள்) கொண்டுள்ளது. பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10-ஆக உள்ளது.