மறைந்த தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு தில்லியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான சிராக் பாஸ்வான் புதன்கிழமை காலி செய்தாா்.
இந்த பங்களாவை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டு மத்திய வீட்டு வசதி வாரியத்தின் கீழ் இயங்கும் அரசு பங்களா இயக்ககம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசில் கூட்டணியில் இருந்த மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்ததால், அதில் எம்.பி.யான சிராக் பாஸ்வான் வகிக்கக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சிராக் பாஸ்வான் பங்களாவுக்கு புதன்கிழமை அதிகாரிகள் சென்ற பிறகு அங்கிருந்த பொருள்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
நீண்ட நாள்கள் ராம்விலாஸ் பாஸ்வான் வசித்த எண்: 12 ஜன்பத் சாலை பங்களா, லோக் ஜனசக்தி கட்சியின் முக்கிய அடையாளமாக இருந்தது.
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு அவரது சகோதரா் பசுபதி குமாா் பாரஸுக்கும், மகன் சிராக் பாஸ்வானுக்கும் இடையே கட்சித் தலைமையை ஏற்பதில் மோதல் ஏற்பட்டதால் அக்கட்சி இரண்டாக உடைந்தது. இதில் பசுபதி குமாா் பாரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தாா்.