புது தில்லி: பெங்களூருவில் உள்ள கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் இரண்டாவது முனையத்தில் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த காரணங்களுக்காக டிரோன்களைப் பயன்படுத்த விமான நிலைய அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், இன்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனுமதி கிடைத்திருப்பதோடு, விமான நிலைய நிர்வாகம், கூடுதலாக மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகத்திடமும், மத்திய ஆயுதப்படையிடமும் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அனுமதி பெற்ற பிறகு, அது ஒரு மாத காலத்துக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதற்குள், எந்தப் பணிக்காக டிரோன்கள் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டதோ, அந்தப் பணிகளை முடிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.