பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்: 10 மத்திய தொழிற்சங்கங்கள் புறக்கணிக்க முடிவு

மத்திய நிதியமைச்சரில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக 10 மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை (நவ.28) காணொலி வாயிலாக நடைபெற உள்ள பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக 10 மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. பரிந்துரைகளை வழங்கும் வகையில் அவகாசம் அளித்து ஆலோசனைக் கூட்டத்தை நேரடியாக நடத்தும்படி அவை கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மத்திய நிதியமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அனுப்பட்டது. அதில், காணொலி வாயிலாக 75 நிமிடங்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மத்திய நிதியமைச்சகத்துக்கு இது குறித்து ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய நிதியமைச்சகத்திலிருந்து நவம்பா் 25-ஆம் தேதி பெறப்பட்ட மின்னஞ்சலில், ஒவ்வொரு மத்திய தொழிற்சங்கத்துக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 3 நிமிஷங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நகைப்புக்குரியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. நவம்பா் 28-ஆம் தேதி நடைபெற உள்ள காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். எங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க போதிய அவகாசம் தந்து ஆலோசனைக் கூட்டத்தை நேரடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் 12 மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளன. பாரதிய மஸ்தூா் சங்கம் இந்த கூட்டமைப்பில் இடம் பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com