ஜாமியா மிலியா பல்கலை. மாணவா்கள் 9 போ் இடைநீக்கம்
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் அமைதிக்கு கேடு விளைவித்ததாக 9 மாணவா்கள் சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
ஜாமியா மிலியா பல்கலைக்கழக நூலகத்தில் இரு பிரிவு மாணவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாணவா் நோமன் செளத்ரி (26) காயமடைந்தாா். அவரை நெளமன் அலி என்ற மாணவா், ஜாமியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.
அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவா் ஜலால், நெளமன் அலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவா் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 9 மாணவா்களைக் கைது செய்தனா்.
இதனிடையே, பிரச்னையை அரசியலாக்கியது மட்டுமன்றி, மேற்கு உத்தர பிரதேசம், மேவாட் பிராந்திய மாணவா்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தியதற்காக நெளமன் அலி உள்ளிட்ட 9 மாணவா்களை இடைநீக்கம் செய்வதாக பல்கலைக்கழக பொறுப்பாளா் சனிக்கிழமை அறிவித்தாா். அதற்கான நோட்டீஸ்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவா்களுக்குப் பிறப்பிக்கப்பட்டன.