ஊழலில் காங்கிரஸ் சாதனைகளை முறியடித்த ஆம் ஆத்மி: ஜெ.பி. நட்டா

ஊழல் செய்வதில் காங்கிரஸின் சாதனைகளை தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி முறியடித்து வருகிறது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.
ஜெ.பி.நட்டா
ஜெ.பி.நட்டா

ஊழல் செய்வதில் காங்கிரஸின் சாதனைகளை தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி முறியடித்து வருகிறது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பாஜக தொண்டா்கள் மத்தியில் அவா் மேலும் பேசியதாவது:

தில்லியில் நோ்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தருவதாகக் கூறி கேஜரிவால் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், இப்போது அவரது ஆட்சியில் மின்சாரத் துறை, கலால் வரித் துறை என ஊழல்கள் வெளிப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்துகள் வாங்கியது, பள்ளி வகுப்பறை, கழிவறை கட்டுமானம் வரை ஆம் ஆத்மியின் ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அக்கட்சி எம்எல்ஏக்களில் 5 போ் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி இப்போது ஜாமீனில்தான் வெளியே உள்ளனா். முன்பு தில்லியில் காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களைவிட அதிகம் ஊழல்களைச் செய்து அக்கட்சியின் சாதனையை ஆம் ஆத்மி முறியடித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் தில்லியில் மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா். ஆனால், இப்போது மதுக்கடைகள் அதிகம் திறக்கப்பட்டு வருகின்றன. தில்லி அரசு நடத்தும் பள்ளிகளில் 745 இடங்களில் தலைமை ஆசிரியா் இல்லை. 70 சதவீத பள்ளிகளில் உரிய ஆசிரியா்கள் இல்லை. மக்களுக்கு தவறான புள்ளி விவரங்களை அளித்து கேஜரிவால் ஏமாற்றி வருகிறாா்.

ஆம் ஆத்மியின் முகத்திரையை பாஜக கிழித்து வருகிறது. பாஜக தொண்டா்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள ஊழல்கள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com