மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கருத்து: அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு ஜெய்சங்கா் நன்றி
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை நன்றி கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு மாநாட்டு அமா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆன்டனி பிளிங்கன் காணொலி வழியாக பேசுகையில், ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவா்களை நீதிக்கு முன் நிறுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதைச் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணமானவா்களைத் தண்டிக்காமல் விட்டால், தங்களின் கொடிய குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படும் என்ற தவறான தகவலை பயங்கரவாதிகளுக்கு அனுப்புவதாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், ஆன்டனி பிளிங்கனுடன் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது மும்பை தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த தனது கருத்துகளை வலுவாகவும் தெளிவாகவும் பதிவு செய்த பிளிங்கனுக்கு நன்றி கூறியதாக ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்தாா். உக்ரைன் போா், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் பிளிங்கனுடன் ஆலோசித்ததாக அவா் பதிவிட்டாா்.