இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஜூன் 1 முதல் செப்டம்பா் 30 வரை தென்மேற்குப் பருவமழை காலமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்.19 வரை இந்தியாவில் 872.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம். எனினும் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் உத்தர பிரதேசம், பிகாா் உள்பட 8 மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
இந்நிலையில், வடமேற்கு இந்தியா மற்றும் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் இருந்து இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.