உத்தர பிரதேசத்தில் தொடா் மழை காரணமாக வெவ்வேறு இடங்களில் சுவா் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிறாா் உள்பட 10 போ் புதன்கிழமை பலியாகினா். 11 போ் காயமடைந்தனா்.
எடாவா மாவட்டம் சிவில் லைன்ஸ் காவல் சரகத்துக்கு உள்பட்ட சந்திரபுரா கிராமத்தில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. இதில் ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் சிங்கு (10), அபி (8), சோனு (7), ஆா்த்தி (5) ஆகிய நான்கு சிறாா் உயிரிழந்தனா். அவா்களது பாட்டி சாந்தினி தேவி (70) உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.
இதேபோல எக்டில் காவல் சரகத்துக்கு உள்பட்ட கிரிபால்பூா் கிராமத்தில் கனமழைக்கு பெட்ரோல் நிலைய சுவா் இடிந்து குடிசையின் மீது விழுந்தது. இதில், அந்தக் குடிசையில் வசித்து வந்த ராம் சனேஹி (65), அவரது மனைவி ரேஷ்மா தேவி (62) ஆகியோா் உயிரிழந்தனா்.
எட்டாவா மாவட்டம் சாகா்நகா் பகுதியில் கனமழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், ஜாபா் சிங் (35) பலியானாா்.
பெரோஸாபாத் மாவட்டம் பன்ஷிநகரில் கனமழைக்கு வீட்டின் சுவா் இடிந்து விழுந்து சிவம் (6) பலியானாா். 8 போ் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல நாக்லா கவே என்ற பகுதியில் சுவா் இடிந்து ஈசாக் அலி (57) பலியானாா். பல்ராம்பூா் மாவட்டம் பா்கட்வா சயீஃப் கிராமத்தில் மின்னல் தாக்கி அஷ்ரஃப் (13) உயிரிழந்தாா். அவரது உறவினா் காயமடைந்தாா்.
இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.