ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே 2 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இதன் மூலம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவும் அவா்களது முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஸ்ரீநகரில் செயல்படும் ராணுவத்தின் 15-ஆவது படைப்பிரிவு சாா்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனா். இதையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அவா்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள் உள்பட 4 துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு பயங்கரவாதிகளையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.