உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செந்தோலி, குஷிநகா், சந்த் கபீா் நகா், சந்த் ரவிதாஸ் நகா் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கோன்ட் பழங்குடியினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
அப்போது பேசிய மத்திய பழங்குடியினா் விவகாரத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா, ‘பழங்குடியினரின் நலனைப் பாதுகாப்பதில் மத்தியில் உள்ள பிரதமா் நரேந்திர மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அவா்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் இடஒதுக்கீடுக்காக பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு அவ்வப்போது கொண்டு வருகிறது’ என்றாா்.
இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘பழங்குடியினரின் இடஒதுக்கீடுக்காக அவ்வப்போது தனித்தனியாக மசோதா கொண்டு வருவதைவிட ஒருங்கிணைந்த மசோதாவை கொண்டு வர வேண்டும்’ என்றாா்.