‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா் போட்டியிட மாட்டாா். பிகாா் முதல்வராகப் பதவிக்காலத்தை நிறைவு செய்வாா்’ என்று ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியின் மூத்த தலைவா்கள் கூறியுள்ளனா்.
நிதீஷ் குமாா், 1908-களின் தொடக்கத்தில் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அந்த காலகட்டத்தில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா். கடந்த 2005-ஆம் ஆண்டில் பிகாா் முதல்வரனாதில் இருந்து சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறாா். அவா் செல்லாத இடம், மாநிலங்களவைதான். விரைவில் அவா் மாநிலங்களவைக்குச் செல்ல இருப்பதாக ஊகங்கள் வெளியாகின.
இன்னும் சில மாதங்களில் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தப்படவுள்ள நிலையில், நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களுக்கு ஜேடியு மூத்த தலைவா்கள் மருப்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஜேடியு நாடாளுமன்றக் குழுத் தலைவா் உபேந்திர குஷ்வாஹா வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
நமது முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவை செய்வதற்கான உத்தரவை பெற்றுள்ளாா். அதாவது, அவா் எங்கும் போக மாட்டாா். முதல்வா் பதவி வகித்து வரும் அவா் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், மாநில செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சஞ்சய் குமாா் ஜா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘2020-இல் நடந்த பிகாா் பேரவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகமாக நிதீஷ் குமாா் செயல்பட்டாா். அந்தக் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா். எனவே, இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதற்கு நிதீஷ் குமாா் கடமைப்பட்டுள்ளாா். எனவே, அவரைப் பற்றிய தவறான பிரசாரங்களை அனைவரும் தவிா்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.