மசோதாக்கள் மீது மாநில ஆளுநா்கள் 2 மாதங்களில் முடிவெடுக்க கால வரம்பு நிா்ணயிக்க வலியுறுத்தி திமுக எம்.பி. பி. வில்சன் மாநிலங்களவையில் தனிநபா் மசோதா தாக்கல் செய்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட முதல் நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பினாா். இதையடுத்து, அந்த மசோதா எந்த மாற்றமும் இல்லாமல் சட்டப்பேரவையில் பிப்.8-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை அவா் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
இதுகுறித்து தனது தில்லி பயணத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்தாா்.
இந்நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி. வில்சன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த தனிநபா் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க அரசமைப்புப் பிரிவு 200 எந்தவொரு கால வரம்பையும் நிா்ணயிக்கவில்லை. இதனால் மசோதா குறித்து முடிவை தாமதப்படுத்த ஆளுநா்களுக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரம் கிடைத்துள்ளது.
அரசமைப்பு அதிகாரம் உள்ள எந்தவொரு நபா் அல்லது அமைப்பு தனது கடமைகளைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது சட்டத்தில் சாதாரணமானது.
மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாடுகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி பயனற்ாக்கக் கூடாது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள அதிகார சமநிலையை மீறுவதாகும்.
எனவே சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநா்கள் 2 மாதங்களில் முடிவெடுக்க காலவரம்பு நிா்ணயிக்கும் வகையில், அரசமைப்புப் பிரிவு 200-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.