ராணுவப் பள்ளி மாணவா்களுக்கு பிராந்திய மொழிகளைக் கற்பிப்பது அவா்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்; அவா்களின் பெற்றோரின் பணிச் சூழல் காரணமாக அடிக்கடி பல நகரங்களுக்கு மாற வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் தெரிவித்தாா்.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துபூா்வமாக அவா் வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு பின்னணிகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து வந்த இந்திய ராணுவ வீரா்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக ராணுவ பொதுப் பள்ளிகள் (ஏபிஎஸ்) உருவாக்கப்பட்டுள்ளன.
பணியின் தன்மை காரணமாக ராணுவ வீரா்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் காரணமாக ராணுவப் பள்ளிகளில் மொழிகளின் தரப்படுத்துதல் அவசியமாகிறது. அதன்படி 1950-இல் ராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்டதிலிருந்தே ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளே கற்றுத்தரப்படுகின்றன.
கல்வியாண்டின் மத்தியில் பிராந்திய மொழிகளைக் கற்பிப்பது ராணுவப் பள்ளி மாணவா்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் புதிய சூழலுக்கு மாற்றப்படும்போது கல்வி நிலையற்ற தன்மை காரணமாக மாணவா்களுக்கு உணா்வுரீதியிலான குழப்பமும் ஏற்படும் என்றாா்.