நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி,
கிராமங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்க ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் 126 நாள்களுக்கு ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைகள் உட்பட 25 பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை அதிகரிக்க இத்திட்டம் உதவுகிறது.
ஏழை மக்களின் நீண்டகால வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், பொது உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார சொத்துக்களை உருவாக்குவதன் மூலம் கிராமங்களை மேம்படுத்தவும், துன்பப்படுபவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் ஒரு பல்முனை யுக்தியை இத்திட்டம் மேற்கொண்டது.
பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.