மக்கள் சேவைக்கு உங்களை அர்ப்பணியுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பாஜக நிறுவன தினம் அக்கட்சி சார்பில் கொண்டாடப்படவுள்ள நிலையில், "மக்கள் சேவைக்கு உங்களை அர்ப்பணியுங்கள்' என்று பாஜக எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் சேவைக்கு உங்களை அர்ப்பணியுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பாஜக நிறுவன தினம் அக்கட்சி சார்பில் கொண்டாடப்படவுள்ள நிலையில், "மக்கள் சேவைக்கு உங்களை அர்ப்பணியுங்கள்' என்று பாஜக எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
 பாஜக நிறுவன தினம் ஏப்ரல் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 14 நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப். 7-ஆம் தேதி முதல் ஏப்.14 வரை "இருவார கால சமூக நீதி கொண்டாட்டம்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
 இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
 பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடம் பாஜக எம்.பி.க்கள் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் பாஜக எம்.பி.க்கள் உற்சாகத்துடன் பங்கேற்பதோடு மக்கள் சேவைக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்றார்.
 இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சி பற்றியும் அங்கு தனிப் பெரும்கட்சியாகவும், பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்தும் அரசமைத்திருப்பது குறித்தும் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் நாகாலாந்தில் இருந்து முதன்முறையாக மாநிலங்களவைத் தேர்வு செய்யப்பட்ட பெண் எம்.பி.யும் கலந்து கொண்டார். அதுவும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
 பாஜக நிறுவன நாளான புதன்கிழமை பாஜக உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
 பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறுகையில், "முதல் முறையாக மாநிலங்களவையில் பாஜக நூறு எம்.பிக்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது' என்றார்.
 பாஜக எம்.பி.க்களுக்கு கட்சியின் சின்னம், பெயர் பொறித்த ஆரஞ்சு நிற தொப்பிகள் வழங்கப்பட்டன. இந்தத் தொப்பியை அண்மையில் பிரதமர் மோடி அணிந்திருந்தார். சில பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடி உருவம் பதித்த தொப்பிகளை அணிந்திருந்தனர்.
 14 நாள்கள் நடைபெறும் பாஜக நிறுவன தின நிகழ்ச்சிகளில், ஏப். 7 அன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜன ஒளஷதி (மக்கள் மருந்தகம்) திட்டங்கள் குறித்து பாஜக எம்.பி.க்கள் பிரசாரம் மேற்கொள்வர்.
 ஏப். 8 மத்திய அரசின் பாரத பிரதமர் வீட்டு வசதி உதவித் திட்டம் குறித்தும், ஏப். 9 மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்தும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஏப். 9 சமூக சீர்த்திருத்தவாதி ஜோதிராவ் புலே பிறந்த நாளையும், ஏப்.14 -ஆம் தேதி பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளையும் பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளும் பாஜக சார்பில் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
 ஏப். 12 கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்' என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
 தவிர மத்திய அரசின் இலவச உணவு திட்டம், பழங்குடியினரைத் தொடர்பு கொள்ளுதல், அமைப்பு சாரா தொழிலாளர்களை அணுகுதல், நிதிசார் திட்டங்கள், ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்து தலா ஒரு நாள் பாஜகவினர் பிரசாரம் செய்கின்றனர்.
 தற்போது சுதந்திர தின அம்ருத் மகோத்சவ் திருவிழா நடைபெறும் இடங்களில் பாஜக உறுப்பினர்கள் தங்கள் பகுதி குளங்களை சீரமைக்குமாறு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சி தொடக்கத்தின்போது கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com