நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை அளித்த பதில்:
இந்திய பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 4ஜி தொலைத்தொடா்பு வலையமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4ஜி சேவைக்கான 6,000 கைப்பேசி கோபுரங்களை உடனடியாக வாங்கும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னா் மேலும் 6,000 கோபுரங்களை வாங்கவுள்ளது. நாடு முழுவதும் 4ஜி சேவைக்காக மொத்தம் 1 லட்சம் கோபுரங்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
தற்போது 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடா்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்றாா் அவா்.