ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.
தில்லிக்கு பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சித் திட்டங்கள், நிதி பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின், ஆந்திரம் திரும்பிய ஜெகன் மோகன், நேற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை நேரில் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, புதிய அமைச்சரவைப் பட்டியலை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பவுள்ளார்.
இதையடுத்து, ஏப்ரல் 11ஆம் தேதி காலை 11.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதய அமைச்சரவையில் உள்ளவர்களில் 4 பேரைத் தவிர மற்ற அனைவரும் ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.