இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜெய் ராம் தாக்கூரை நீக்கி விட்டு அனுராக் தாக்கூரை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுவருவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பிரபலம் அடைந்துவரும் நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என எண்ணி பாஜக இந்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால் மற்றும் தில்லியில் அவரது ஆட்சி மாதிரிக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவற்றால் பயந்து முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு பதிலாக அனுராக் தாக்கூரை நியமிக்க பாஜக விரும்புகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நாங்கள் அறிந்தோம்.
முற்றிலும் தோல்வியடைந்த ஜெய்ராம் தாக்கூர் அரசால் மாநில மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர், எனவே, வரவிருக்கும் சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு வழங்க விரும்புகிறார்கள். ஆம் ஆத்மி இமாச்சல பிரதேச மக்களிடம் இருந்து மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன் முதல்வரை மாற்றுவது, அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க உதவாது. பாஜக என்ன செய்தாலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.