தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,000 கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்சிசிபி) நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்பனேற்றப்பட்ட பானங்கள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீருக்கான ஆலை சித்திப்பேட்டை மாவட்டத்தின் பண்டாதிம்மாபூரில் உள்ள உணவு பதப்படுத்தும் பூங்காவில் அமைய உள்ளது.
கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையில் முதற்கட்டமாக ரூ.600 கோடியும், அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.400 கோடியும் முதலீடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த முதலீட்டை ரூ.1,000 கோடியாக உயர்த்தும் என்று தெலங்கானாவின் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்தாண்டு முதல் இத்தொழிற்சாலை செயல்பட இருப்பதாகவும் இதில் ஏராளமானவர்களுக்குப் பணி வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த ஆலையில் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த கோகோ-கோலா நிறுவனத்திற்குப் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார்.