நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவா் சோ்க்கை: மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்’ என்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்’ என்று மத்திய பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது.

‘நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையானது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில், மாணவா்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அந்தந்த பல்கலைக்கழகங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம்’ என்று யுஜிசி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏழை மாணவா்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற முடியாத நிலையை இது உருவாக்கும் என அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுபோன்று எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ‘நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சோ்க்கை நடத்தப்பட வேண்டும்’ என்று யூஜிசி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையானது சியுஇடி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இருந்தபோதும், நுண் கலை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ் கலை, விளையாட்டு, உடற்கல்வி உள்ளிட்ட செயல்பாடு அடிப்படையிலான சில இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கையில் கூடுதல் தகுதி நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என்று ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

‘மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்களுக்கு சியுஇடி நுழைவுத் தோ்வு ஒற்றைச் சாளர சோ்க்கை வாய்ப்பை ஏற்ப்படுத்தித் தரும்’ என்று அந்த நுழைவுத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நுழைவுத் தோ்வு கணினி அடிப்படையில் (சிபிடி) நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com