தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
மாவட்டத்தின் ஷியாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மந்திரபேட்டா கிராமம் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், நான்காவது நபர் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொழிலாளர்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். அவர்களில் 3 பேர் மஞ்சுளா(48), விமலா(50), ரேணுகா(48) என்பது தெரியவந்தது.
மேலும், காயமடைந்தவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் எம்எல்ஏ ஜி.வெங்கட்ரமணா ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.75 ஆயிரமும், தனிப்பட்ட முறையில் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியும் அறிவித்தார்.