ஜம்மு: கரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது.
அனைத்து இந்து தெய்வங்களிலும், சிவபெருமான் இந்தியர்களால் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்ரபாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார் கூறியிருப்பதாவது:
ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும், யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. பக்தர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி ஆலய வாரியத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் நேஷல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியின் 100 கிளைகள் என 446 கிளைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு சராசரியாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, ரம்பனில் 3000 பக்தர்கள் தங்கும் வகையில் "யாத்ரி நிவாஸ்" அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் "இந்த ஆண்டு பக்தர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு சில நாள்களுக்கு முன்பும், 2020 மற்றும் 2021 இல் முழுமையாக யாத்திரை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.