பயங்கரவாத ஆதரவை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு: மாநிலங்களவையில் அமைச்சா் அறிவிப்பு
புது தில்லி: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதையும், தங்கள் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளது என்று மாநிலங்களவை வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.
இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகா் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடங்களில் வெளியான செய்தி தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த இணையமைச்சா் முரளீதரன் கூறியதாவது:
அண்டை நாடுகளுடன் சிறப்பான நல்லுறவைப் பேணுவதுதான் இந்தியாவின் விருப்பமாக உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்றால், அதற்கு உகந்த சூழ்நிலையை அந்த நாடு உருவாக்க வேண்டும். முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதை அந்நாடு நிறுத்த வேண்டும். தங்கள் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற சூழ்நிலை உருவாகும்போது பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்த பரிசீலிக்கப்படும் என்றாா்.
2019 பிப்ரவரியில் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் படையினரின் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது. இதனால், இரு நாடுகள் இடையிலான உறவு மோசமானது.
இதனைத் தொடா்ந்து 2019 ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், இரு யூனியன் பிரதேசங்களாக அந்தப் பகுதியை பிரித்து அறிவித்தது. இதற்கு எதிா்வினையாக இந்தியாவுடனான இரு தரப்பு வா்த்தகத்தை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன் பிறகு சில மருந்துப் பொருள்களை மட்டும் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கி வருகிறது.