பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நான்கு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தை இன்று சென்றடைந்தார்.
ஜெ.பி.நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துத் தலைவர்களும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று பொதுமக்களிடன் கலந்துரையாடுமாறு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் நட்டா தனது சொந்த மாநிலத்திற்கு வந்துள்ளார். நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் இமாச்சல் தேர்தலை மனதில் வைத்து, மக்களின் மனநிலையை அறிந்து, அரசு நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் கருத்துக் கேட்க உள்ளார்.
நட்டாவின் வருகை சிம்லாவில் உள்ள விதான் சௌக் முதல் பீட்டர் ஹோப் வரை பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்குகிறது. அதன்பிறகு 11.10 மணியளவில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஞாயிறன்று நட்டா சிம்லாவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
பின்னர் துட்டு, தர்லாகாட், நாம்ஹோல், பண்ட்லா உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்சித்தொண்டர்களையும் அவர் சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதி, பாஜக தலைவர் நிச்லி பத்தேட், மந்திர் ஷெட், சல்னூ, மோர்சிங்கி ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மறுநாள், நட்டா கோதிபுராவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்வார். ஜந்துட்டா, கந்தவுர், காகாஸ் மற்றும் ரகுநாத்புரா ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்களுடன் நட்டா உரையாடுவார்.