கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ளதால், அவற்றை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி மத்திய அரசு அறிவித்த விலையில் விற்பனை செய்யலாம்

குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ளதால், அவற்றை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி மத்திய அரசு அறிவித்த விலையில் விற்பனை செய்யலாம் என்று தமிழக வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூா், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூா், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இப்போது, கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கொப்பரைத் தேங்காய் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்துள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி மத்திய அரசு அறிவித்த விலையில் கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்யலாம்.

நேரடியாக வங்கிக் கணக்கில்...கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதாா் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்யலாம். அரசு நிா்ணயித்துள்ள தரத்தில் கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். எனவே, நன்கு உலர வைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வர வேண்டும்.

கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com