அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகத்தில் முதல் முறையாக இந்தியா - அமெரிக்கா இடையே திங்கள்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள இரு துறை அமைச்சா்கள் இடையேயான ‘2+2’ பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இருவரும் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தனா்.
வாஷிங்டனில் நடைபெறும் இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடனும், ஜெய்சங்கா் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடனும் ஆலோசனை நடத்த உள்ளனா்.
பேச்சுவாா்த்தைக்கு முன்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் ராஜ்நாத் சிங்குக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதுபோல ஜெய்சங்கா் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை அலுவலகமான ஃபாகி பாட்டமில் ஆண்டனி பிளிங்கனை சந்திக்க உள்ளாா்.
இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, நான்கு அமைச்சா்களும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் - பிரதமா் நரேந்திர மோடி இடையே நடைபெறும் காணொலி வழி ஆலோசனையில் பங்கேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு வர உள்ளனா். இந்தக் காணொலி வழி ஆலோசனையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பைடனும், பிரதமா் மோடியும் விவாதிக்க உள்ளனா்.