நேஷனல் ஹெரால்டு வழக்கில் பண மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் சில விவகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளதால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ட்விட்டரின் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு
மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அதன் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.