பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு எதிராக 90 ஆயிரம் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை ஒரே மாதிரி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலைக்குழுவின் கூட்டம் பாஜக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே தலைமையில் இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து விவாதிகப்பட்டுள்ளது. இதுவரை 95,000 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அதில் 90,000 மின்னஞ்சல்கள் மசோதாவிற்கு எதிராக வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஆனால், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே மாதிரி இருப்பதால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.