தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான பிரதமரின் விருதுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த உடான் திட்டத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்தது. 2020-ஆம் ஆண்டுக்கான பொது நிா்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு இந்தத் திட்டம், தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்புப் பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணியாளா் தினமான ஏப்ரல் 21-ஆம் தேதி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான விருதை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி, நல்லாட்சி, தரமான சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகும்.
உடான் திட்டத்தின்கீழ், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் 100 புதிய விமான நிலையங்களைக் கட்டவும், 2026-ம் ஆண்டிற்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.