கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு மாகாணத்தின் ஸ்பெராய் மாவட்டத்திலும், கிழக்கு குனார் மாகாணத்தின் ஷால்தான் மாவட்டத்திலும் வஜிரிஸ்தான் அகதிகள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் டூரன்ட் கோடு அருகே பாகிஸ்தான் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று கோஸ்ட்டின் தகவல் மற்றும் கலாசார இயக்குனர் ஷபீர் அகமத் உஸ்மானி தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோஸ்டைச் சேர்ந்த பழங்குடித் தலைவர் ஜாம்ஷித், 40க்கும் மேற்பட்டோர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிலரின் முகங்களும் உடல்களும் கருகி அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தன என்று பாதிக்கப்பட்ட சிலரை அடக்கம் செய்ய உதவிய கோஸ்டைச் சேர்ந்த ஒரு மத அறிஞர் அப்துல் வஹாப் கூறினார். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.