கரோனா தரவுகளை வெளியிடுவதை கேரள அரசு நிறுத்திவிட்டதாகத் தவறான தகவலை மத்திய அரசு பரப்புவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2020 முதல் நாள்தோறும் மாலை 6 மணிக்கு கரோனா பாதிப்புகள் குறித்த தரவுகளை கேரள அரசு வெளியிடுகிறது. தொடக்கத்தில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்திப்பார். கடந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதளவில் வெற்றி பெற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்திப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்.
இதையும் படிக்க | சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம்தான் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். கரோனா சூழலைக் கையாளும் பொறுப்பு சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 13-ம் தேதிக்குப் பிறகு 5 நாள்கள் கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை வெளியிடாதது குறித்து கேரள அரசுக்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை கடிதம் எழுதியது.
இதுபற்றி கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கமளிக்கையில், "கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடாமல் ஒன்றும் இல்லை. கரோனா பாதிப்பு தரவுகளை இ-மெயில் மூலம் தினசரி அனுப்பிக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு இவ்வாறு கூறுவது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. மத்திய அரசு தவறான விஷயத்தை பரப்புகிறது" என்றார்.
மேலும், திங்கள்கிழமை சுமார் 200 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.