இந்திய ராணுவ வீரரின் வாட்ஸ்ஆப் குழுவில் பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சோ்ந்தவா் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு விதிமீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரா் இடம்பெற்றுள்ள ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் வெளிநாட்டு தொலைபேசி எண் இடம்பெற்றுள்ளது. அது, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சோ்ந்தவரின் என்பதை ராணுவத்தின் உளவுப் பிரிவும், மற்ற உளவுப் பிரிவினரும் கண்டறிந்துள்ளனா். இதில், பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளதா எனக் கண்டறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடா்பாக, ராணுவ வீரா்களுக்கு ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ராணுவ வீரா்கள் யாரும் இணையவழி சாா்ந்த பெரிய அளவிலான சமூக ஊடகக் குழுக்களில் இடம்பெறக் கூடாது. ராணுவ வீரா்கள் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவா் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.
ஒருவேளை சமூக ஊடகக் குழு தொடங்கினால், அதில் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவா்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவா்கள் ஒருவருக்கொருவா் நன்கு அறிமுகமானவா்களாக நம்பிக்கைக்குரியவா்களாக இருக்க வேண்டும்.
நமது தகவல்களை மட்டுமன்றி, ராணுவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நமது நோக்கம் ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீனப் படையினருடன் தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்விரு நாடுகளின் உளவுப் பிரிவினா் சமூக ஊடகங்கள் வழியாக ஊடுருவி நமது தகவல்களைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.