‘‘கேரள கரோனா பாதிப்பு புள்ளிவிவரம் தினந்தோறும் மத்திய அரசிடம் தவறாமல் சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படவில்லை எனக் கூறுவது தவறு’’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்துள்ளாா்.
மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கேரள சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராஜன் என்.கோப்ரகடேவுக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில், ‘‘கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 5 நாள்களாக கேரள கரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை மாநில அரசு மத்திய அரசிடம் சமா்ப்பிக்கவில்லை. இது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவா்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை மத்திய அரசு கண்காணிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள கரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை மாநில அரசு புதுப்பித்து தினந்தோறும் மத்திய அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கேரளத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்ததால், தினந்தோறும் வெளியிடப்பட்டு வந்த மாநில கரோனா பாதிப்பு புள்ளிவிவரம் ஏப்.10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. எனினும் அந்தப் புள்ளிவிவரம் கட்டாயம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டு துல்லியமாக மறு ஆய்வு செய்யப்படுகிறது. அந்தப் புள்ளிவிவரம் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தினந்தோறும் மத்திய அரசிடம் தவறாமல் சமா்ப்பிக்கப்படுகிறது. அதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளன. அதனை அழிக்க முடியாது. எனவே அந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படுவதில்லை எனக் கூறுவது தவறு; கண்டனத்துக்குரியது. இதுதொடா்பான அனைத்து விவரங்களையும் இணைத்து மத்திய அரசுக்கு மாநில அரசு விரைவில் கடிதம் அனுப்பும். கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தால், அதுதொடா்பான புள்ளிவிவரம் பொது வெளியில் மீண்டும் வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.