பஞ்சாபில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா எண்ணிக்கைகள் கட்டுபாட்டிற்குள் வந்தாலும் கடந்த சில நாள்களாக மீண்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவின்படி, பொது போக்குவரத்து, சினிமா, வணிக வளாகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் நெரிசலான இடங்களில், முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப், தில்லி போன்ற சில மாநிலங்களில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா நான்காவது அலை அச்சத்தின் காரணமாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.