மருத்துவ சேவை பெறுவது அடிப்படை மனித உரிமை: உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி
மருத்துவ சேவை பெறுவது அடிப்படை மனித உரிமை என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காணொலி வாயிலான தொலைத்தொடா்பு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்கவுள்ளது. இந்த மையம் மூலம் மீனாட்சி மருத்துவமனையின் 45 விதமான சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த மருத்துவா்களிடம் நோயாளிகள் நேரடியாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற முடியும்.
இந்த மையத்தை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது:
கரோனா பரவலுக்குப் பிறகு கணினிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. நீதிமன்றங்கள்கூட காணொலி வழியாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கில் உள்ள இதர மாநிலங்களைச் சோ்ந்த நோயாளிகள் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற தென்னிந்தியாவுக்குச் செல்கின்றனா். புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில் கணினி வாயிலாக மருத்துவ சேவை அளிக்கப்படவுள்ளது, நோயாளிகள் தென்னிந்தியாவுக்குப் பயணிக்கும் சிக்கலை குறிப்பிட்ட அளவு குறைக்கும். மருத்துவ சேவை பெறுவது அனைவரின் அடிப்படை மனித உரிமை என்றாா் அவா்.