நாட்டில் 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று வியாழக்கிழமை(ஏப்.28) தொடங்குகிறது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா்.
கரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. கடந்த 2 வாரங்களில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்புக் கேடயமாக தடுப்பூசிகள் உள்ளன. எனவே, தகுதியுடைய அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து பெற்றோருக்கும் சிறாா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய அளவில் மருந்துகளையும், மருத்துவப் பணியாளா்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
இந்நிலையில், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ள ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியை 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்தும் பணி இன்று வியாழக்கிழமை முதல் (ஏப்.28) முதல் தொடங்குகிறது.
பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 5-12 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்துவதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.