புது தில்லி: நடப்பு நிதியாண்டில் உர மானியம் 55% அதிகரித்து ரூ.2.5 லட்சம் கோடியாக இருக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கரீப் (கோடை-விதைப்பு) மற்றும் ரபி (குளிா்கால-விதைப்பு) பருவத்தின்போது உள்நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், முக்கிய மண் ஊட்டச் சத்துகளை இறக்குமதி செய்ய ஏற்கெனவே முக்கிய உலகளாவிய உற்பத்தியாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
சவூதி அரேபியா, ஓமன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் உர இறக்குமதியை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
இறக்குமதி விலை அதிகரிப்பை ஈடு செய்ய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீட்டினை வழங்கும். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் உர மானியம் 55% அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.5 லட்சம் கோடியை எட்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.