உத்தரப் பிரதேசம் மதுராவில் உள்ள முபாரிக்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டு கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜல் என்கின பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் ஜெய் மாலா என்கிற பாரம்பரிய சடங்கு நடைபெற்ற முடிந்தவுடன் அவர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னொரு ஆணுடன் திருமணம் நடைபெறவிருந்ததால் கோபமடைந்த அந்த நபர் இந்த செயலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி குண்டின் சத்தம் கேட்டு, குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறுகையில், "ஜெய் மாலை சடங்கு முடிந்தவுடன், ஓய்வெடுப்பதற்காக என் மகள் அவரது அறைக்கு சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் வந்து அவர் சுட்டு கொலை செய்தார். இப்படி நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை" என்றார். சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியவந்துள்ளது. புகாரை பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.