புது தில்லி: இறக்குமதியை குறைக்கும் வகையில், உள்நாட்டில் 102 பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் இறக்குமதியில் ரசாயனம், மின்னணு சாதனங்கள், இன்சூலின் ஊசி உள்ளிடவற்றின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, 102 பொருள்களுக்கு உள்நாட்டில் தேவை மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அதனை ஈடு செய்யும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி இல்லை.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 57.66 சதவீத பங்கினைக் கொண்டுள்ள 102 பொருள்களை அதிக முன்னுரிமை அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு உடனடி தலையீட்டின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில்துறை கூட்டமைப்பு, உற்பத்தியாளா்கள், வா்த்தக தலைவா்கள் உள்ளிட்டோா் திறன் விரிவாக்கத்தை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து கண்டறிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார வளா்ச்சிக்கு வினையூக்கியாக இருக்கும் என்பதுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.