குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடல்நலக் குறைவின் காரணத்தால் தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் இன்று (ஆகஸ்ட் 4) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: “ குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நலம் விசாரித்தார். விரைவில் உடல் நலம் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.” எனப் பதிவிடப்பட்டுள்ளது.