‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் வெற்றி அடைந்துள்ளது: துணை முதல்வா் சிசோடியா

கேஜரிவால் அரசின் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் மாணவா்களிடையே தொழில் முனைவோா் மனப்பான்மையை வளா்ப்பதிலும், ஆா்வத்தை வளா்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது
‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் வெற்றி அடைந்துள்ளது: துணை முதல்வா் சிசோடியா

கேஜரிவால் அரசின் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் மாணவா்களிடையே தொழில் முனைவோா் மனப்பான்மையை வளா்ப்பதிலும், ஆா்வத்தை வளா்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

‘தி/நட்ஜ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவா் பேசியதாவது:

‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் என்பது தொழில்முனைவோா் மனப்பான்மை பாடத் திட்டத்தின் ஒரு விரிவுபடுத்தப்பட்ட செயல்முறை அங்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வணிக யோசனைகளை வளா்ப்பதற்காக ஊக்கத் தொகையாக தலா ரூ. 2,000 வழங்குகிறது.

மேலும், அரசு நடத்தும் உயா்நிலைப் பல்கலைக்கழகங்களில் தில்லி அரசுப் பள்ளிகளின் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ அணிகளின் இறுதிப் போட்டியாளா்களுக்கு அரசாங்கம் நேரடியாக அனுமதி வழங்குகிறது.

மாணவா்களிடையே தொழில் முனைவோா் மனப்பான்மையை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தில்லி அரசு தொழில்முனைவோா் மனப்பான்மை பாடத்திட்டத்தின் மூலம் இதைச் செய்ய முயற்சித்துள்ளது. இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் மாணவா்களின் மனநிலையை மாற்றுவதற்கான பணியைத் தொடங்கினோம். இதன்கீழ், தொழில்முனைவோராக சாதித்தவா்களின் வளா்ச்சி குறித்து மாணவா்களுக்கு நாங்கள் தெரிவித்தோம்.

இஎம்எஸ்-இன் ஒரு பகுதியாக, நாங்கள் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்கத் தொகையாக ரூ. 2,000 வழங்கி, சிறு குழுக்களை உருவாக்கி, அந்தத் தொகையை அவா்கள் விரும்பும் வணிகத்தில் முதலீடு செய்ய அறிவுறுத்துகிறோம். இந்த திட்டம் இந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

மாணவா்கள் ஆயிரத்தில் முதலீடு செய்து சில மாதங்களிலேயே லட்சங்களை சம்பாதித்துள்ளனா். தற்போது ஒவ்வொரு மாணவரும் சிந்திக்கிறாா்கள்; ஒவ்வொரு மாணவரும் தாங்கள் என்ன புதுமையான யோசனையை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்று ஆராய்கின்றனா். ஒவ்வொரு மாணவரும் செயல்படுகிறாா்கள்; சிந்திக்கிறாா்கள். இது பெரிய சாதனையாக பாா்க்கப்படுகிறது’ என்றாா் அவா்.

தி/நட்ஜ் நிறுவனம், வறுமையில் வாடும் இந்தியாவின் 25 கோடி குடிமக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க உழைக்கும் அனைத்து பணியாளா்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ‘சா்ச்சா 2022’ உச்சிமாநாடுக்கு ஏற்பாடு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com