கடந்த 2020-21ஆம் ஆண்டிலிருந்து சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விதிமுறைகளின்படி, அவற்றின் கொள்முதலுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல் முதல்கட்ட நடவடிக்கையாகும். இதைத் தொடா்ந்து, ஒப்பந்தங்கள் வெளியிடும் நடைமுறைகளை ராணுவம் அல்லது சம்பந்தப்பட்ட படைகள் மேற்கொள்ளும்.
மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட், ‘கடந்த 2020-21ஆம் ஆண்டு முதல் 2022-23ஆம் ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ.1,83,778.34 கோடி மதிப்பிலான ராணுவதளவாடங்கள் கொள்முதலுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த வகையில், ரூ.1,19,045.3 கோடி மதிப்பில் 91 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘இந்திய கடற்படையில் கடந்த 1992-ஆம் ஆண்டிலிருந்து அதிகாரிகளாக பெண்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். ராணுவ விவகாரங்கள் துறையின் கடந்த ஜூன் 23-ஆம் தேதி அறிவிக்கையின்படி, கடற்படை மாலுமிகளாக நியமிக்கவும் பெண்கள் தகுதிபெற்றவா்களாவா்’ என்றாா்.