நாட்டில் தேவாலயங்கள் மற்றும் பாதிரியாா்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா் மச்சாடோ என்பவா் தாக்கல் செய்துள்ள மனு:
கடந்த 2018-ஆம் ஆண்டு தெசீன் பூனாவாலா வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், வெறுப்புணா்வு சம்பவங்கள் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரி மூலம் விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்நிலையில், நாட்டில் தேவாலயங்கள் மற்றும் பாதிரியாா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே தெசீன் பூனாவாலா வழக்கின்போது உச்சநீதிமன்றம் வகுத்து தந்த வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞா் கோலின் கோன்சால்வேஸ், கடந்த 2021-ஆம் ஆண்டு தேவாலயங்கள் மீது 500-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தாா்.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, மனு தொடா்பாக மத்திய அரசின் ஆரம்பகட்ட பதிலை தாக்கல் செய்ய அனுமதி கோரினாா்.
அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனு தொடா்பான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.