மத்திய வரி பகிர்வில் மாநிலங்களுக்கு ரூ.1.16 லட்சம் கோடி விடுவிப்பு: தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நிகழ் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக ரூ. 1,16,225.75 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நிகழ் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக ரூ. 1,16,225.75 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வழக்கமான மாதாந்திர தவணை ரூ. 58,332.86 கோடியாகும். இந்த மாதம் மற்றோரு தவணையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரிலும் இதுபோன்று வழங்கப்பட்டது. மாநில அரசுகள் தங்களின் மூலதனம், மேம்பாட்டுச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவர்களது கரங்களை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டின்படி, இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரிப் பகிர்வின்படி 28 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ. 1,16,665.75 கோடியில், தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி கிடைத்துள்ளது. இதில் உத்தர பிரதேசம் (ரூ. 20,928 கோடி), பிகார் (ரூ.11,734 கோடி), மத்திய பிரதேசம் (ரூ.9,158 கோடி), மகாராஷ்டிரம் (ரூ. 7,369), மேற்கு வங்கம் (ரூ.8,776) ஆகிய மாநிலங்கள் அதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளன.
15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் நிகழ் 2022-23 ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 8,16,649 கோடியை மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு அளிக்க மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது ரூ. 9.3 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெருநிறுவன வரி, வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, சேவை வரி போன்றவற்றில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கார்ப்பரேட் வரி (பெருநிறுவனம்), வருமான வரி, ஜிஎஸ்டி ஆகிய வரிகள் இந்த மாநிலங்களில் அதிக அளவில் வசூலாகி வருகிறது. இதன் அடிப்படையில், இந்த மாநிலங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 50,000 கோடிக்கு மேல் மத்திய வரிப் பகிர்வில் நிதி கிடைக்கிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு சுமார் ரூ. 1.46 லட்சம் கோடியும், பிகார் மாநிலம் சுமார் ரூ. 82,138 கோடியும் பெருகின்றன. தமிழகத்துக்கு நிகழ் நிதியாண்டில் ரூ. 33,311 கோடி வழங்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com